×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* தயிர், மோர் பாத்திரங்களை புளியைப் பயன்படுத்தி தேய்த்தால் சுத்தமாகும். வெயிலில் காய வைத்து எடுத்தால் வாடை இருக்காது.

* பிரிஞ்சி இலைகளை லேசாகக் கசக்கி, சமையல் அறையின் அலமாறியில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் நெருங்காது.

* தாமிரப் பாத்திரங்களை தக்காளி, புளி கொண்டு தேய்த்தால், கறைகள் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
- எஸ்.ராஜம், திருச்சி.

* சமையல் வேலை முடிந்த உடன் கிச்சனை சுத்தம் செய்து கடைசியாக எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் கழுவினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும். எந்தவிதமான துர்நாற்றமும் அடிக்காது.

* அடை வார்த்து எடுத்தவுடன் சூடாக இருக்கும்போதே அடையின் மேல் நாட்டுச்சர்க்கரையை லேசாக தூவினால் அடை அடடான்னு ருசியாக இருக்கும்.

* புளி சாதத்தில் வேர்க்கடலையை தோல் நீக்கி நெய்யில் வறுத்து கலந்தால் புளிசாதம் கம கம வாசனையுடன் இருக்கும்
- பி.கவிதா, சிதம்பரம்.

* ஃபிரிட்ஜில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெற்றிலை, மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் கெடாமல் புதிதாக இருக்கும்.

* தோலில் செய்த எந்தப் பொருளையும் பாலில் நனைத்துள்ள துணியால் துடைத்தால் நல்ல பளபளப்பாகி  புதிதாக காட்சியளிக்கும்.

* பூஜை அறைகளில் மாட்டியுள்ள படங்களை பூச்சிகள் அரிக்காமல் இருக்க தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து படங்களை துடைக்க வேண்டும்.

* கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டு கரைத்து பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகளின் தொல்லை இருக்காது.
- வா.மீனாவாசன், வந்தவாசி.

* திடீரென்று விருந்தினர்கள் வந்துவிட்டால் சாம்பார் செய்ய வேண்டுமா? துவரம்பருப்பை ஊற வைத்து ரவைப் பதமாக அரைத்து குழம்பு கொதித்து காய் வெந்தவுடன் இதை சேர்த்து சாம்பார் செய்யலாம். இம்மாதிரி சாம்பார் செய்யும்போது சேப்பங்கிழங்கு, பூசணி சேர்த்துச் செய்தால் சூப்பராக இருக்கும்.

* எலுமிச்சை ரசம் செய்யும்போது பச்சை மிளகாய், தக்காளியை சிறிது நெய் சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு துவரம்பருப்பு அல்லது பயத்தம்பருப்பு தண்ணீர் சேர்த்து இறக்கி வைத்த பின்பு எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயம் சேர்த்து செய்து பாருங்கள் சுவை மட்டும் அல்லாது ரசமும் எளிதில் காலியாகி விடும்.
- ராஜி குருசாமி, ஆதம்பாக்கம்.

* துருவிய உருளைக்கிழங்கின் மீது பயத்தம் மாவை தூவி சிப்ஸ் செய்ய மொர மொரப்பாக இருக்கும்.

* பூண்டுச்சாற்றில் உப்பு கலந்து உடம்பில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவிவிட சுளுக்கு மறையும்.

* வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட கரையாத தொப்பையும் கரையும்
- மல்லிகா குரு, சென்னை.

* முருங்கைப்பூவை பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். கண்களுக்கும் நல்லது.

* வெந்தயத்தை  தேங்காய்ப்பாலில் ஊற வைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைமுடி உதிர்வது குறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

* வெயில் காலத்தில் தினமும் இளநீர் அல்லது மோர் குடித்து வந்தால் உடம்பிலுள்ள நீர்ச்சத்து குறையாது. மயக்கம் வராது. களைப்பு நீங்கும்.

- கே.சாயிநாதன், சென்னை

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!