புதுடெல்லி: முதல்வரின் நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் புதியத் தொழில் தொடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவம்பர் 14ம் தேதி தொடங்கியது. இங்கு தமிழக அரசு அமைத்துள்ள அரங்கை நேற்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அ.கணேச மூர்த்தி எம்.பி, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம், ‘முதலமைச்சரால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றார்.