காந்திநகர்: குஜராத் முதல்வராக மோடி இருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்திய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஹரிகிருஷ்ணா படேல், தற்போது பாஜகவில் இணையவுள்ளார். குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிருஷ்ணா படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாதில் என்பவரை கடந்த ஞாயிறன்று சந்தித்தார். கடந்த 1999ம் ஆண்டு குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த ஜூன் மாதம் வதோரா சரக காவல்துறைத் தலைவராக (போலீஸ் ஐஜி) பணியாற்றிய நிலையில் ஓய்வு பெற்றார்.
தற்போது இவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நான் பாஜகவில் இணைவது உறுதி. கொள்கையளவில் அக்கட்சியில் சேர முடிவு செய்துள்ளேன். என் பெற்றோர்கள் பொது வாழ்க்கையில் நிறைய பணிகள் செய்துள்ளனர். அதனால் நான் பாஜகவில் இணைந்து மக்கள் பணியாற்ற உள்ளேன்’ என்றார். இதுகுறித்து மாநில போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2012ம் ஆண்டில் ஜாம்நகர் எஸ்பியாக ஹரிகிருஷ்ணா படேல் பணியாற்றினார்.
அப்போது சுரேந்திரநகர் மாவட்டம் தங்கத் நகரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். முன்னதாக சோட்டிலாவில் நடந்த நிகழ்ச்சியில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி பங்கேற்பதாக இருந்தது. அந்த நேரத்தில்தான் தங்கத் நகரில் நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த ஹரிகிருஷ்ணா படேல் அனுப்பப்பட்டார். இவரது தலைமையிலான போலீஸ் படைதான் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
தற்போது ஓய்வுபெற்ற நிலையில், இந்த மாத இறுதிக்குள் பாஜகவில் ஹரிகிருஷ்ணா படேல் இணையவுள்ளார். அடுத்தாண்டு மத்தியில் குஜராத் தேர்தல் வரவுள்ளதால், அவரது இணைவு முக்கியத்துவம் பெற்றுள்ளது’ என்று அவர்கள் கூறினர்.