பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (28). இவர், கடந்த 1ம்தேதி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், சுகன்யா அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துகொண்டு தப்பினர். இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசில் சுகன்யா புகார் செய்தார். அதன்படி எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் உத்தரவின்பேரில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், கேமராவில் பதிவான உருவங்களை சுகன்யாவிடம் காண்பித்து அடையாளம் காட்டும்படி கூறினர். அதன்படி அவர் அடையாளம் காட்டினார். திருவொற்றியூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ராசையா (24) என்பதும், அவருடன் வந்தவர் மணலி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிரித்திவிராஜ் (21) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று கொடுங்கையூர் குப்பைமேடு அருகில் பதுங்கியிருந்த ராசாவை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரிடமிருந்து 8 சவரன் தங்கச்செயின் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடன் வந்த பிரித்திவிராஜ் மற்றொரு வழக்கில் மணலி போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராசையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.