திருத்தணி: திருத்தணி பழைய சிவன் கோயில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜடாமுனீஸ்வரர் மற்றும் கங்கையம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோயில் வளாகத்தில் 5 யாக சாலைகள், ஏழு கலசங்கள் வைத்து தினமும் 3 கால பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு 4ம் கால யாக பூஜையும் 9 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு கலச ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு கங்கை அம்மன், ஜடாமுனீஸ்வரர் ஆகிய சிலைகள் மீது கலச நீரை ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தினர்.
அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் நாகன், நகர திமுக பொறுப்பாளர் வினோத்குமார், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜிஎஸ் கணேசன், சாம்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.