நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் வேதாரண்யம் மக்கள் தவிக்கின்றனர். அரசு அறிவித்த உதவிகள் கூட முழுமையாக கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கஜா பெயருக்கு ஏற்றார் போலவே கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி ருத்ரதாண்டவம் ஆடி சென்றது. மணிக்கு 150 கி.மீ.வேகத்தில் வீசிய காற்றில் சிக்கி நாகை மாவட்டத்தில் மட்டும் 183 கிராமங்கள் சின்னாபின்னாமாகின. தென்னை, மா, பலா, தேக்கு, சந்தனம், வேம்பு உள்பட லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை தோட்டங்கள் அழிந்தன.
ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஏராளமான குடிசைகள், வீடுகளை புயல் கபளீகரம் செய்தது. விளைவு, பல நாட்களாக குடிதண்ணீர், சாப்பாடு கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். வாரக்கணக்கில் போக்குவரத்து முடங்கியது. குறிப்பாக மரங்கள் முறிந்து விழுந்ததால் தீவு போல துண்டிக்கப்பட்டது வேதாரண்யம். பல மாதங்களை கடந்த பிறகு நிலைமை சீரடைந்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய வடுக்கள் இன்றளவும் மாறாமல் உள்ளதாக இருக்கின்றன என்று விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அங்கு புயலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதன் பின் அரசு அறிவித்த எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று வேதனை படுகின்றனர் வேதாரண்யம் மக்கள். கொடியக்காடு முனியப்பன் ஏரி பகுதியில் பறவைகளை கண்டு ரசிக்கும் வகையில் கட்டப்பட்டு இருந்த பார்வை கோபுரத்தை கூட இன்னும் சீரமைக்கவில்லை. கஜாவால் சேதமடைந்த உப்பளங்களில் 50 விழுக்காடு கூட சீரமைக்கப்படாததால் உப்பு உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு கைகொடுத்தால் மட்டுமே வேதனையில் இருந்து மீள முடியும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.