×

பல்லடம் பகுதியில் நூல் விலை உயர்வால் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம்; ரூ.500 கோடி துணி தேக்கம்.!

பல்லடம்: திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கொரோனா 2ம் அலை பொதுமுடக்கத்தால் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே உற்பத்தி செய்த துணிகளை அனுப்ப முடியாததால் ரூபாய் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்தன. திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி துணி உற்பத்தியாளர்களுக்கு வர வேண்டிய தொகை ரூபாய் பல கோடி அளவிற்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2ம் கொரோனா அலை முடிவுக்கு வந்து உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் துணி விற்பனையாகாததால் பல்லடம் பகுதியில் ரூ.500 கோடி விசைத்தறி துணி தேக்கமடைந்தள்ளது.
மேலும் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விசைத்தறி துணி உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பல்லடம் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க  ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது: திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது.

இத்தொழில்  ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் இத்தொழில் முற்றிலும் முடங்கியது.
மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால், சற்றே விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.  அதனால் தமிழகத்தில் இருந்து ஜவுளிகள் அதிகமாக ஏற்றுமதியாகும் குஜராத், மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் வடமாநில மொத்த ஜவுளி வியாபாரிகள், ஏற்கனவே துணி ஆர்டர் கொடுத்து தயார் நிலையில் இருந்த காடா துணிகளை அனுப்ப வேண்டாம் என்றும், புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்தும், ஏற்கனவே ஆர்டர் கொடுத்து பெற்ற துணிகளுக்கு, இது வரை பணம் அனுப்பாமலும்  உள்ளனர். இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது கொரோனா பொதுமுடக்கத்தின் பாதிப்பால் 80 சதவீத தொழில் முடங்கிவிட்டது. ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 20 சதவீத ஏற்றுமதி உற்பத்தியாளர்கள்  மட்டுமே தற்போது விசைத்தறிகளை  இயக்கி வருகின்றனர். கொரோனா பொதுமுடக்கத்தால் திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூபாய் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளது. எனவே  வங்கிகளில் வாங்கிய கடனுக்கு 3 மாதத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும். அசல் தொகை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் ஜவுளித் தொழில் சீராகும் வரை கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில்  நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். துணிக்கு உற்பத்திக்கான மூலதன பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விசைத்தறி ஜவுளி தொழிலை பாதுகாக்க அரசு இத்தொழில் துறையினருக்கு தேவையான உதவிகள், சலுகைகள் அளித்து காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 20 கவுண்ட் ரகம் (வார்ப்பு) ஒரு கிலோ நூல் விலை ரூ.140-ரூ.150  ஆக இருந்தது. தற்போது ரூ.195 - ரூ.205 ஆக மிக கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கழிவு பஞ்சு விலை உயர்ந்து விட்டதால்தான் நூல் விலையை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்று ஒ.இ.மில் நிர்வாகத்தினர் தரப்பில் கூறுகின்றனர். நூல் விலை உயர காரணம் சீனாவில் மின்சார பற்றாக்குறை, நிலக்கரி பிரச்சனை ஆகியவற்றால் சர்வதேச நாடுகளுக்கு சீனாவின் துணி ரகங்கள் வருவதில்லை. அதனால் வியாட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பஞ்சு, நூல் போன்ற மூலப்பொருட்கள் ஏற்றுமதியாகிறது. அதனால் நமது நாட்டில் எந்த விலை கொடுத்தாலும் உடனே நூல் கிடைப்பதில்லை. முன் பணம் கட்டி ஆர்டர் செய்தால்தான் 10 நாட்கள் கடந்த பின்னர் நூல் கிடைக்கும் என்ற நிலை தற்போது நிலவுகிறது. இந்தியாவில் இருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யாமல் மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரித்து அனுப்பினால் கூடுதலாக அன்னிய செலவாணி கிடைக்கும். தீபாவளி பண்டிகைக்கு முன்பு 20 கவுன்ட் 63 இஞ்ச் காடா துணி ஒரு மீட்டர் ரூ.50க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அதே துணி ரூ.45க்கு தான் விலை போகிறது. கேட்டால் தற்போது எந்த ஆர்டரும் இல்லை. சூரத், அகமதாபாத் பகுதியில் சாய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. துணி தேவையும் இல்லை.

அதனால் நாங்க துணியை கொள்முதல் செய்து குடோனில் இருப்புதான் வைக்க வேண்டும் என்று வட மாநில துணி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு மீட்டர் துணி உற்பத்தி அசல் விலை ரூ.53 ஆகிறது. அதற்கு மேல் விலை கிடைத்தால்தான் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். பஞ்சு மற்றும் நூல் விலையை ஒரே சீராக இருந்தால்தான் ஜவுளி உற்பத்தி தொழிலும் சீராக நடைபெறும். எனவே நூல், பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்காலிக தடையை உடனே பிறப்பிக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் பஞ்சு சேமிப்பு கிடங்கில் இருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள பஞ்சை உள்நாட்டு தேவைக்கு மானிய விலையில் விற்க வேண்டும். எப்போதும் உள்நாட்டு தேவை போக மீதம் ஆகும் உபரி பஞ்சு, நூல்களை மட்டுமே மத்திய அரசு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். இச்சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மட்டும் ரூ.500 கோடி மதிப்பிலான விசைத்தறி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. நூல் விலை கடும் உயர்வால் விசைத்தறி துணி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இத்தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்சமயம்  தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க விசைத்தறி தொழில் நிலைமை சீராகும் வரை ஜவுளி உற்பத்தியை முழுமையாக நிறுத்தம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Palladam , Power loom shutdown due to rising yarn prices in Palladam; Rs 500 crore fabric stagnation!
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...