×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரி நல்லமநாயுடு மாரடைப்பால் காலமானார்..!!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட நல்லமநாயுடு திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி.யான நல்லமநாயுடு, 1997ல் பள்ளி ஓய்வுக்கு பின்னர் பெரம்பலூரில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இதனிடையே கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து நல்லமநாயுடுவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டம் கும்பிநாயக்கன்பட்டிக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இறந்த நல்லமநாயுடு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து அவரை கைது செய்தவராவார். ஆறே மாதத்திற்குள் ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தார். அதுவே தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்க காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Former ,Chief Minister ,Jayalalithaa ,Nallamanayu , Jayalalithaa, property, Nallamanayudu, passed away
× RELATED சொல்லிட்டாங்க…