செந்துறை: செந்துறை பகுதியில் பெய்த கன மழையால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தண்ணீர் தேங்கி குளம்போல் உள்ளது. மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்துறை அருகிலுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகம் தாழ்வான பகுதியாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது குளம்போல் காட்சியளிப்பதோடு நீர் வடிய நீண்ட நாட்கள் ஆகிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் 15 நாட்களுக்கு மேலாக நீர்தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கட்டிடங்கள் மட்டுமின்றி சுற்றுசுவர்களும் ஊறி பலவீனமடைந்து உள்ளது.
தொடர்ந்து நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பாதிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி நடைபெற்று வரும் நிலையில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் கல்விதுறை எந்தவித பாதுகாப்பு நவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கோள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், தொடர்ந்து தேங்கி நிற்கும் நீரால் ஊறிய சுற்றுச்சுவர் அல்லது கட்டிடங்கள் சிதிலமடைவதோடு குழந்தைகள் மேல் விழுந்தால் யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளி வாளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளமான பள்ளி வளகத்தினை மண் நிரம்பி மேடாக்கித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.