சென்னை: தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தாமாக முன்வந்து உடல் உறுப்பு தானம் பதிவு செய்வோர் உண்டு. இதுபோக, விபத்துகளில் மூளைசாவு அடைந்தோர்களின் உடல் உறுப்புகளும் தானமாக வழங்கப்படும். இதேபோல், உடல் உறுப்பு தானத்தில் சிலர் போலியான ஆதார் எண்களை கொடுத்து முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இந்தநிலையில், உடல் உறுப்பு தானம் செய்வதற்கும், பெறுவதற்கும் புதிய கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, உடல் உறுப்பு தானத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆகியோர் ஆதார் அட்டை எண் அடிப்படையில் சேவைகளை பெற முடியும். மேலும், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆதாரின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.