கூடலூர்: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 140.35 அடியானதால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடங்கியதால், நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,797 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2021 கனஅடியாகவும், மாலையில் 4,400 கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 3,378 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. நேற்று மாலை 140.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் காலை 140.35 அடியானது.
இதையடுத்து அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 900 கனஅடியிலிருந்து 2,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,378 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 7,221 மில்லியன் கனஅடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.23 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,627 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1,619 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 5,630 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 30 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 100 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57.00 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாகவும், அணையில் இருந்தது வினாடிக்கு 100 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 435.32 மில்லியன் கனஅடியாக உள்ளது.
பெரியாறு அணை பகுதியில் 26.3 மி.மீ., தேக்கடியில் 23.8 மி.மீ., கூடலூரில் 26.3 மி.மீ., பாளையத்தில் 18.3 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.