×

கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணி ஜரூர்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கனமழை காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. சில இடங்களில் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தன. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏவிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்ற ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் தீவிரமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள சாலை, 12வது வார்டு பகுதியில் உள்ள சாலை உள்ளிட்ட பல சாலைகள் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகளை முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராகிம், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், நகர அவைத்தலைவர் மரிய ஜெயந்தன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

‘‘இதேபோன்று நகர்ப்பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்’’ என்று ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார்.

Tags : Kodaikanal , Road repair work is required in Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...