திருத்துறைப்பூண்டி: மழை வெள்ள பாதிப்பிலிரந்து மக்களை பாதுகாக்க ஒருநாள் கூட ஓய்வின்றி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் பகுதியில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து முத்தரசன் அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பாதிப்பில் இருந்து மீட்பதற்காக கடுமையான முயற்சிகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஒருநாள் கூட ஓய்வின்றி பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும், மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீரை வடிய வைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வளவனாறு அருகில் பிச்சன்கோட்டகம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
முந்தைய ஆட்சியில் வளவனாறு தூர்வார ஒரு பெரும்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நிதியில் முறையாக செலவு செய்யப்படாததால் தூர்வாரும் பணி முழுமை பெறாத காரணத்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முழுமையாக பணிகள் நடந்திருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.