பலமு: காரில் சென்று கொண்டிருந்த ஜார்க்கண்ட் பாஜக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாஜக இளைஞரணி அமைப்பின் ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்ட பொருளாளர் சுமித் ஸ்ரீவத்சவா, தேசிய நெடுஞ்சாலை எண்: 98ல் காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் அப்பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு அருகே கிடந்தது. தகவலறிந்த போலீசார் சுமித் ஸ்ரீவத்சவாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமு எஸ்பி சந்தன் குமார் சின்ஹா கூறுகையில், ‘சுமித் ஸ்ரீவத்சவாவின் உடலில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. அவரது வலது காதுக்கு அடியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ஹரிஹுர்கஞ்ச் பகுதியில் லாட்ஜ் மற்றும் ஓட்டலை சுமித் வத்சவா நடத்தி வந்தார். முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.