×

சாலைகளில் ஓட்டை உடைச்சல் உடனடி நடவடிக்கைக்கு செயலி: இந்தியா-ஜப்பான் முயற்சியில் ‘ஸ்மார்ட்போன் மேப்’

புதுடெல்லி: சாலைகளில் பள்ளம், விரிசல், பொத்தல் போன்ற பழுதுகள் இருந்தால் அதை மக்களே படம் எடுத்து செயலியில் பதிவேற்றலாம். இதன் மூலம், பழுதடைந்த சாலைகள் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இந்தியா-ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக இணைந்து சாலை வரைபட செயலியை உருவாக்கி வருகிறார்கள்.  இந்தியாவில் தங்க நாற்கர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுங்கவரி வசூல் செய்தாலும், மழை வெள்ளத்துக்கு சாலைகள் பழுதடைந்து விடுகிறது. இதை தேசிய நெடுஞ்சாலைகள் துறை பராமரிப்பதிலும் மெத்தனம் காட்டுகிறது. இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், சாலை மேம்பாட்டை கருத்தில் கொண்டும் ஸ்மார்ட்போன் மூலம் இந்தியா, ஜப்பான் நாட்டிலுள்ள சாலை வரைபடத்தை படம் பிடித்து செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்டு திட்டத்தில் ரூர்கேவை சேர்ந்த ஐஐடி, டோக்கியோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிராஜ் என்ற விஞ்ஞானியிடம் இருந்தும், இதற்கான தகவல்களை பெற்று வருகின்றனர். இந்தக்குழு சாலையின் நிலையை தானாக கண்காணிக்கும் ஒரு செயலியை உருவாக்க இருக்கின்றனர். இதனால் சாலையில், பொத்தல், விரிசல், வேகத்தடை, பள்ளம் ஆகியன உடனுக்குடன் கண்டுபிடிக்கப்படும். இது குறித்து இந்தியக் குழுவை மேற்பார்வையிடும் ரூர்கே ஐஐடி பேராசிரியர் துர்கா தோஷ்னிவால் கூறுகையில், ‘‘சமூக பொருளாதார கட்டமைப்பில், சாலை உட்கட்டமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சாலைகளின் நிலையை அடிக்கடி கண்காணிப்பதால் பாதுகாப்பு, விபத்தில்லா பயணம் அமையும்.

நாடு முழுவதும் உள்ள சாலைகளை பராமரிப்பது மற்றும் கண்காணிப்பதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை. எனவே, ஸ்மார்ட்போன் மூலம் ஒரு செயலியை ஜப்பான் ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியோடு உருவாக்கி வருகிறோம். ‘ஸ்மார்ட்போன் மேப்பிங்’ எனப்படும் இந்த செயலி மூலம் மக்கள் தங்கள் பகுதியில் பழுதடைந்துள்ள சாலை குறித்த விவரங்களை நேரடியாக கிளவுட் சர்வரில் பதிவேற்றம் செய்ய முடியும்,’’ என்றார்.

* டெல்லி சாலையில் சேதங்களை செல்போனில் படம் பிடிக்கும் பெண் ஆய்வாளர்.
* இந்திய - ஜப்பான் குழு இதுவரையில் 31 ஆயிரம் பழுதடைந்த சாலைகளை மேப்பிங் செய்துள்ளது.
* ஜப்பானில் இச்சிஹரா நகரம், சிபா நகரம், சுமிதா வார்டு, நாககுட்டே நகரமும், இந்தியாவில் டெல்லி, குர்கான், அரியானா நகர சாலைகளும் இதில் அடங்கும்.

எதனால் நடக்கிறது?
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அறிக்கையின்படி, ‘கூர்மையான வளைவுகள், பள்ளங்கள் மற்றும் செங்குத்தான சாய்வுகளை கொண்ட சாலைகளில் விபத்துகள் அதிகம் நடக்கிறது. இதை வெற்றிகரமாக கண்காணிக்க ஒரு கருவி அவசியம்.’ என கூறியுள்ளது.


Tags : India ,Japan , Road, Hole Break, Processor, India, Japan, ‘Smartphone Map’
× RELATED ஓட்டுப்போட ஜப்பானில் இருந்து பறந்து வந்த சேலம் வாக்காளர்