ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ஊத்தங்கரை வேடியப்பன் கோயில் முதல் சென்னப்பநாயக்கனூர் வரை உள்ள சாலைகள், குண்டும் குழியுமாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள், குழி இருக்கும் இடம் தெரியாமல் கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
இச்சாலை வழியாக பெங்களூரு, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. நேற்று ஊத்தங்கரை-திருவண்ணாமலை சாலையில், வேடியப்பன் கோயில் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை சேறும், சகதியாக மாறியதால், அவ்வழியாக வந்த லாரி சேற்றில் சிக்கிக்கொண்டது. பல மணி நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.