பெங்களூரு: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46), கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூரு கண்டீரவா ஸ்டுடியோவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அங்குள்ள குட்டி யானை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சரணாலய துணை வன பாதுகாவலர் நாகராஜ் கூறியதாவது: சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமில், 2 ஆண்டுகளுக்கு முன்பு நேத்ரா என்ற யானைக்கு குட்டி யானை பிறந்தது. கடந்த புதன்கிழமை தாயிடம் இருந்து குட்டி யானையை பிரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தாய் யானையை காட்டில் கட்டிவிட்டு, குட்டி யானை வேறு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது. குட்டி யானைக்கு 2 வயதானதும் தாய் யானையிடம் இருந்து பிரித்துவிடுவது வழக்கம். புனித் ராஜ்குமார் மறைவதற்கு முன்பு யானைகள் முகாமுக்கு வந்திருந்தார். யானைகள் பயிற்சி பெறுவதை பார்த்து ரசித்தார். தற்போது அவரது நினைவாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், 2 வயது ஆண் குட்டி யானைக்கு பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் என்று பெயரிட்டுள்ளோம்.