சென்னை: மக்கள் நல்வாழ்த்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நண்பர்கள் சிலருக்கு நான் பேஸ்புக் பக்கத்தில் இருந்து, நண்பர்கள் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தனர். நான் யாருக்கும் அப்படி கொடுக்காத நிலையில், அந்த கணக்கை பார்த்தபோது, எனது பேஸ்புக் கணக்கு போன்றே, போலியாக உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், பலருக்கு நண்பர்கள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் வாயிலாக எனது புகைப்படங்களை பகிர்ந்து, பின், அவர்கள் பணம் பறிக்கும் முயற்சியாக இருக்க கூடும் என்பதால், உடனடியாக எனது பேஸ்புக் பக்கத்தில் இருந்தே, அந்நிறுவனத்துக்கு புகார் அளித்தேன். அதன் அடிப்படையில், 5 நிமிடத்தில், அந்த போலியான கணக்கு நீக்கம் செய்யப்பட்டது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. கணக்கு நீக்கப்பட்டதால், காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. இதுபோன்று வரும் போலியான பேஸ்புக் அழைப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.