×

ஏழை, வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதில் முரண்பாடு கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இறுதி தீர்மானம் எட்டுவதில் சிக்கல்: கூட்டம் முடிந்த போதிலும் விடிய விடிய பேச்சு

கிளாஸ்கோ: கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்துவது மற்றும் வளரும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களால் இறுதி தீர்மானம் எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையுடன் மாநாடு முடிந்தாலும், இறுதி தீர்மானத்திற்கான பேச்சுவார்த்தைகள் நேற்றும் விடிய விடிய தொடர்ந்தன. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐநா.வின் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதில் உலக தலைவர்கள் கடந்த 1, 2ம் தேதிகளில் பங்கேற்று பேசினர். 2070-க்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதில், நிலக்கரி பயன்பாட்டை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் எனவும், நிலக்கரி தொடர்பான திட்டங்களுக்கு நிதி உதவி செய்யக் கூடாது எனவும் உலக நாடுகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து இந்த மாநாடு கடந்த 12ம் தேதி வரை நடந்து வந்தது.

இதில், புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க சேர்ந்து பாடுபட உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. 2030க்குள் காடுகள் அழிப்பை நிறுத்தவும், காடு வளர்ப்பை மேற்கொள்ளவும் 100 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். 2030க்குள் பசுமை இல்ல வாயுவான மீத்தேன் உமிழ்வை குறைக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விலகிச் செல்ல 40 நாடுகள் வாக்குறுதி அளித்தாலும், முக்கிய நிலக்கரி பயன்பாட்டாளர்களான அமெரிக்காவும், சீனாவும் இதில் கையெழுத்திடவில்லை. அதே போல், பருவ நிலை மாற்றத்தை சமாளிக்க வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் குறிப்பிட்ட நிதித் தொகுப்பை ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று பல நாடுகள் கருதுகின்றன. இதன் காரணமாக இறுதி தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நேற்று முன்தினத்துடன் மாநாடு தேதி முடிந்த நிலையில், இறுதி தீர்மானத்தை நிறைவேற்ற நேற்று முன்தினமும் விடிய விடிய பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனாலும், முடிவு எட்டப்படவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, விரைவில் கிளாஸ்கோ மாநாட்டில் தீர்மானம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் இதுதான்...
*  நிலக்கரி பயன்பாட்டை நிறுத்துவது, அதற்கான  நிதியுதவியை அளிப்பதில், பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
* பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.75 ஆயிரம் கோடியை வளர்ந்த நாடுகள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளன.
* இது வளரும் நாடுகளிடையே கணிசமான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நீண்ட பேச்சுவார்த்தையின் மூலம், இறுதி தீர்மானம் சில திருத்தங்களுடன்  விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Glasgow Climate Conference , Poor, Developing Country, Funding, Glasgow Climate, Conference
× RELATED 5 நாள் பயணம் இத்தாலி சென்றார் மோடி:...