×

163 நாடுகள் ஆதரித்து ஓட்டு உலக சட்ட ஆணையம் உறுப்பினர் தேர்தலில் கொடி நாட்டிய இந்தியா: சீனாவை பின்னுக்கு தள்ளி வெற்றி

ஜெனீவா: ஐநா.வின் சர்வதேச சட்ட ஆணையம் 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள் மற்றும் அதன் விதி தொகுப்புகளை மேம்படுத்தி, பரிந்துரை வழங்குவதும், ஊக்குவிப்பதும் இதன் முக்கிய பணியாகும். இதன் உறுப்பினர் பதவிக்கு  எப்போதும் கடும் போட்டி நிலவும். இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினருமான பிமல் படேல் தேர்வாகி உள்ளார். ஐநா.வின் மொத்தமுள்ள 192 உறுப்பினர் நாடுகள் வாக்களித்த இந்த தேர்தலில், சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசியா-பசிபிக் குழுவில் இடம் பெற்றுள்ள 11 நாடுகள், 8 இடங்களை குறி வைத்து போட்டியிட்டன.

இதனால், கடும் போட்டிய நிலவிய நிலையில், பிமல் படேல் 163 வாக்குகளைப் பெற்று தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி பொறுப்பேற்பார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். படேலை தொடர்ந்து தாய்லாந்து 162, ஜப்பான் 154, வியட்நாம் 145, சீனா 142 வாக்குகள் பெற்றன. இதற்கு முன்பு, பிமல் படேல் நெதர்லாந்தின் ஹேக் நகரில் செயல்படும் ஐநா.வின் இளைஞர்கள் மற்றும் ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பில் 15 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக பிமல் படேல் தேர்வானதற்கு ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ். திருமூர்த்தி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பலம் சேர்க்கும்
* ஆசியா-பசிபிக் பகுதியில் தென் சீன கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனா சட்ட விரோதமாக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நிலையில், சர்வதேச சட்ட ஆணையத்துக்கு பிமல் படேல் தேர்வாகி இருப்பது, இந்தியாவுக்கு பலம் சேர்த்துள்ளது.
* சர்வதேச சட்ட ஆணையத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 34. இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள், சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
* ஒவ்வொரு நாட்டு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களே, ஐநா.வில் நடக்கும் சர்வதேச சட்ட ஆணைய உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முடியும்.

Tags : India ,China ,World Law Commission , 163 countries, drive world, legal authority, India, China
× RELATED சொல்லிட்டாங்க…