×

டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் இன்று தொடக்கம்

டுரின்: சீசன் முடிவு உலக தரவரிசையில் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் இன்று தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா),  நடப்பு சாம்பியன் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), மேட்டியோ பெரெட்டினி (இத்தாலி), கேஸ்பர் ரூட் (நார்வே), ஹூபெர்ட் ஹர்காக்ஸ் (போலந்து)  ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களில் சிட்சிபாஸ் (2019),  ஸ்வெரவ் (2018), ஜோகோவிச் (2008, 2012, 2013, 2014, 2015) ஆகியோர் ஏற்கனவே ஏடிபி பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள். கடந்த ஆண்டு  பங்கேற்ற ரபேல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), டீகோ ஷ்வார்ட்ஸ்மென் (அர்ஜென்டீனா) ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நடால் தற்போது தரவரிசையில் 10வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒற்றையர் பிரிவு போல்  இரட்டையர் பிரிவிலும் உலக தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த வீரர்களின் அணிகள் இந்த தொடரில்  பங்கேற்கிறது. நவ. 21ல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

Tags : ATP Finals , Top 8 Player, ATP Finals, Start
× RELATED ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: 7வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்