சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: கோவையில் தனியார் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம். இதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுப்பதுடன், அந்தந்த பள்ளி நிர்வாகங்களும் மாணவச் செல்வங்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அத்துமீறல்களை தடுப்பதில் முழு அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.