×

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு: மதுரையில் நள்ளிரவில் பரபரப்பு

மதுரை: நள்ளிரவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் செண்பகத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குருவி விஜய். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. சில வழக்குகளில் நீதிமன்றத்தில் விடுதலையாகியுள்ளார். இந்நிலையில், செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் பகுதியில் குருவி விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

நள்ளிரவு 12 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த குருவி விஜய் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அலறியடித்தபடி அவரிடம் இருந்து அந்த பெண் தப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டதை கண்ட அந்த பகுதியினர் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த பெண் ரவுடி கும்பலிடம் இருந்து தப்பி சென்றார்.

சிறிது நேரத்தில் அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது மது போதையில் இருந்த ரவுடி குருவி விஜய் தலைமையிலான கும்பல் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. மேலும், போலீசாரை கடுமையாக தாக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றது. அப்போது அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுட்டார். இதில், குருவி விஜய் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். மற்றவர்கள் தப்பி ஓடினர். இதில், குருவி விஜயுடன் இருந்த மேலமடை கார்த்திக் என்பவரை போலீசார் விரட்டிப்பிடித்தனர்.

கார்த்திக்கும் லேசான காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா பார்வையிட்டார். இதையடுத்து, காயமடைந்த குருவி விஜய் மற்றும் மேலமடை கார்த்திக் ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோ.புதூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹோட்டல் உரிமையாளர் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதே நாளில், எஸ்.எஸ்.காலனி பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சிவக்குமார் தனது மனைவி மேரிகுட்டியை கொலை செய்தார். இதேபோல், கடந்த வாரம் வாடிப்பட்டி கரட்டுப்பட்டியைச் சேர்ந்த கோட்டைச்சாமி என்பவர் தனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார். இதேபோல் மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் குற்றசம்பவங்கள் தொடர்ந்து வந்த நிலையில் மதுரையில் ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினர் புகார்
விஜயின் குடும்பத்தினர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயயை அண்ணாநகர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். எங்களிடம் முறையாக பதிலளிக்கவில்லை. நள்ளிரவு அவரது சட்டையால் முகத்தை மூடிய நிலையில் எங்கள் பகுதிக்கு அழைத்து வந்தனர். விஜயை சுற்றி போலீசார் நின்றிருந்தனர். அப்போது துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் சுய நினைவு இல்லாமல் இருப்பதை பார்த்தோம் என கூறியுள்ளனர்.

Tags : Raudy ,Maduro , Police fire on Rowdy who tried to rape woman: Midnight riot in Madurai
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...