டெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் குடியரசு தினத்தில் போராட்டம் நடத்தி கைதான 83 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் நுழைந்தவர்கள் கொடி கம்பத்தில் தங்கள் அமைப்புகளின் கொடியினை ஏற்றினர். விவசாயிகளுக்கும் போலீசார்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த பிரச்சனையில் விவசாயிகள் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தமது அரசு ஆதரிப்பதாக கூறியுள்ளார், டிராக்டர் பேரணி நடத்தி ஜனவரி 26ம் தேதி கைது செய்யப்பட்ட 83 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வர் கருத்தால் ஒன்றிய அரசுக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.