×

மோசடி புகாரில் சிக்கிய கலைமகள் சபாவை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க, உதவி தலைமை பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத சிறப்பு அதிகாரியை 3 வாரங்களில் நியமிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று அதை ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் முதலீடு செய்தது. மொத்தம், 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். இதை பயன்படுத்தி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கலைமகள் சபா வாங்கி இருந்தது.
 இந்த நிலையில் நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார் அளிக்கப்பட்டதையடுத்து கலைமகள் சபா நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அதிகாரியை நிர்வாகத்தை கவனிக்கவும், சொத்துக்களை விற்று உறுப்பினர்களுக்கு உரிய முதலீட்டு தொகை வழங்கவும் நியமித்து உத்தரவிட்டது.  கடந்த 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில், கலைமகள் சபாவின் சொத்துக்கள் விற்கப்பட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஹரிகரன் என்பவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்.  இந்த நிலையில் கலைமகள் சபா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்து தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையுடன் கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 2006ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 22 ஆண்டுகள் கடந்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை வழங்கவில்லை. எனவே, கலைமகள் சபா நிர்வாகத்தை எடுத்து நடத்த உதவி தலைமை பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக 3 வாரங்களில் தமிழக வணிக வரித்துறை செயலாளர் நியமிக்க வேண்டும். தற்போது நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிர்வாகிகள் அந்த பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மொத்த நிர்வாகத்தையும் கணக்கு வழக்குகளையும் ஆவணங்களையும் அடுத்த 3 வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

 தற்போது நிர்வாகத்தை கவனித்து வரும் அதிகாரி ஹரிஹரன், கலைமகள் சபா நிறுவனத்தின் கணக்குகள் வருமான வரி ஆகியவற்றை தணிக்கை செய்து 6 வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும். சிறப்பு அதிகாரி அதை ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Tags : High Court ,Kalaimagal Sabha , Fraud Complaint, Kalaimagal Sabha, Special Officer, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...