திருமலை : புயல் தொடர் மழையால் பாபவிநாசம், ஸ்ரீவாரி செல்லும் மலைப்பாதை சாலையை அதிகாரிகள் மூடி நடவடிக்கை மேற்கொண்டனர். வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழகம், தென் ஆந்திராவில் நெல்லூர் ஸ்ரீவாரிகோட்டாவில் கரையை கடந்தது. இதனால் திருமலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் இருந்த பெரிய மரங்கள் வேறொடு சாய்ந்தது. மேலும், மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. அதுமட்டுமின்றி திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் முதலாவது வளைவில் பாறை சரிந்து விழுந்தது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலை-பாபவிநாசம், வாரி பாதம் செல்லும் மலைப்பாதை சாலையை அதிகாரிகள் நேற்று காலை மூடினர். மேலும், வனத்துறையினர் மற்றும் தோட்டத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி மலைப்பாதை சாலைகளில் ஆங்காங்கே விழுந்திருந்த மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம், மழை காரணமாக 2 மலைப்பாதைகளிலும் சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்தனர். எனவே மலைப்பாதையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அலிபிரியில் பாதுகாப்புப் பணியாளர்கள் மலைப்பாதை சாலையில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகளை விழிப்புடன் இருக்க வேண்டும் அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர்.