சென்னை:
பிஇ, பிடெக் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக
டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம்
அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார்,
அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில்
கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்று அண்ணா
பல்கலைக்கழக பாடத் திட்டத்தின் கீழ் பிஇ, பிடெக், பிஆர்க், எம்ஆர்க்,
எம்பிளான், பட்டப் படிப்புகளை படித்து வரும் மாணவர்களுக்கு செப்டம்பர்,
டிசம்பர் மாதத்துக்கான பருவத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும்.
இதையடுத்து, இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான பருவத்
தேர்வுகள் டிசம்பர் 3வது வாரத்தில் நேரடி முறையில் நடத்தப்படும். அனைத்து
பொறியியல் கல்லூரிகளும், பருவத் தேர்வை நேரடி முறையில் எழுத்து தேர்வாக
மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல செய்முறைத் தேர்வுகளையும் நேரடியாக நடத்த
வேண்டும். இவ்வாறு பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.