சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மழைநீர் பல இடங்களில் தேங்கி வடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திக்குள்ளாகின்றனர். கடந்த 7ம் தேதி தண்டவாளங்களில் நிறைய இடங்களில் மழைநீர் தேங்கியதையடுத்து மின்சார ரயில் சேவைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. முன்னறிவிப்பின்றி ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளானாகினர்.
இந்நிலையில், சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து மின்சார ரயில் சேவைகள் பாதியாக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்ேவ அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.