சென்னை: டி.பி.சத்திரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தயாநிதி மாறன் எம்பி நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு உணவு, பால், ரொட்டி ஆகியவற்றை வழங்கினார். சென்னை டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகர் மற்றும் கே.பி.என்.புரம் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதனால், அங்கு குடியிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் டி.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு தொடர்ந்து 2 நாட்களாக உணவு, பால், ரொட்டி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்தார்.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதியை தயாநிதி மாறன் எம்பி நேற்று மதியம் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் உள்ள சுமார் 30 தெருக்கள் முழுவதும் குளம்போல் மழைநீர் தேங்கி இருந்தது. மழைநீரில் இறங்கி ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் பாதிப்பு குறித்து கனிவோடு கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தயாநிதி மாறன் எம்பியிடம் தெரிவித்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், மழை வெள்ள பாதிப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு உணவு பொட்டலங்கள், பால், ரொட்டி ஆகிய பொருட்களை வழங்கினார். அவருடன் அண்ணா நகர் சட்டமன்ற உறப்பினர் எம்.கே.மோகன் மற்றும் அண்ணாநகர் 8வது மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் வைதேகி, துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் உடன் இருந்தனர்.