சென்னை: அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 சதவீதம் பணியிடங்களை விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோருக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசானையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினை பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் சத்துணவு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களில் 25 சதவீதம் பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.