சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக நேற்று சென்னை, எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாடு அறையின் தொலைபேசி வாயிலாக நேரடியாக கேட்டறிந்து, அதனை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாாிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளையும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், ஜி.என்.செட்டி சாலையில் சத்தியமூர்த்தி பள்ளி வளாகம், விஸ்வநாதபுரம், ரங்கராஜபுரம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் மழைநீர் அகற்றும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார். தொட ர்ந்து, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் உட்புறத்தில் மாம்பலம் கால்வாய் அடையாற்றில் கலக்கும் இடத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தயாநிதி மாறன் எம்பி., சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், த.வேலு, ஜெ.கருணாநிதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ெஜயந்த்,சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
4,40,500 உணவு பொட்டலம்
சென்னை மாநகராட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 1548 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை மற்றும் மதியம் சுமார் 4,40,500 உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.