மும்பை: சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் ஷமிக்கு எதிராக, நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டனர். ஆனால், ஷமிக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு அளித்தனர். இந்த வகையில், விராத்கோஹ்லியும் ஆதரவு அளித்திருந்தார். இந்நிலையில், டிவிட்டர் மூலம், விராத் கோஹ்லி - அனுஷ்கா தம்பதியின் 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டல் வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மும்பை சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் 24ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஐதராபாத், சங்காரெட்டி பகுதியை சேர்ந்த ராம் நாகேஷ் அகுபதினி என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், உணவு டெலிவரி ஆப்ஸ் பிரிவில் பணி புரிந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.