சென்னை: கடந்த அக்டோபர் 29ம் தேதி கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் (46), திடீரென்று மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் மரணம் அடைந்தார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட ஆடியோ பதிவில், ‘எனக்கு சிகிச்சை முடிந்து நன்றாக குணமடைந்து வருகிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது, புனித் ராஜ்குமார் அகால மரணம் அடைந்திருக்கிறார். அந்த விஷயத்தை எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் சொன்னார்கள்.
அதைக்கேட்டு நான் ரொம்ப, ரொம்ப வேதனைப்பட்டேன். மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை. திறமையான, நல்ல அன்பும், பண்பும் கொண்ட அருமையான குழந்தை. நல்ல பேர், புகழின் உச்சியில் இருந்தபோது, இந்த சின்ன வயதில் அவர் மறைந்துவிட்டார். அவருடைய இழப்பு, கன்னட சினிமாவுலகிற்கு ஈடுகட்டவே முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார்.