பர்மிங்காம்: பாகிஸ்தானை சேர்ந்தவருமான மலாலா யூசஃப் சாய், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மேலாளரை இங்கிலாந்தில் திருமணம் செய்து கொண்டார். பெண்களின் கல்விக்காக போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பாகிஸ்தானை சேர்ந்தவருமான மலாலா யூசஃப் சாய் (24), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளர் அசார் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்தின் பர்மிங்காம் வீட்டில் நடந்த எளிய திருமண நிகழ்ச்சியில், இருதரப்பு உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தனது திருமண புகைப்படங்களை மலாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இன்று என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான நாள்; விலைமதிப்பற்ற நாளாக கருதுகிறேன். எனது வாழ்க்கையின் பங்குதாரராக அசார் மாலிக் கிடைத்துள்ளார். பர்மிங்காமில் எங்களது திருமணம் நடந்தது. உங்களது வாழ்த்துக்களை எங்களுக்கு தெரிவிக்க கோருகிறோம். இருவரும் புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்’ என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் மலாலாவை துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014ம் ஆண்டு மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டு, அவர் ஐ.நா-வின் அமைதிக்கான தூதரானார் என்பது குறிப்பிடத்தக்கது.