டோக்கியோ: வடகிழக்கு ஜப்பானின் அகிதா மாகாணத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக யோகோட்டில் உள்ள ஒரு கோழிபண்ணையில் வளர்க்கப்பட்ட சில கோழிகளை பிடித்து மரபணு சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அகிதா மகாணம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிரதமர் ஃபியூமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சகம் மற்றும் பிற அரசு முகமைகள் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யோகோட் பகுதி பண்ணையில் வளர்க்கப்படும் 13 கோழிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், 12 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனால், இப்பகுதியில் வளர்க்கப்படும் 1,43,000 கோழிகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.