சென்னை: நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு கன்னட சினிமா உலகிற்கே பேரிழப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், திடீர் உடல்நலக்குறைவால் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த அக்டோபர் 29ம் தேதி உயிரிழந்தார். புனித்தின் மறைவு திரையுலக பிரபலங்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் 46 வயதிலேயே அவர் மரணம் தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது வரையிலும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவரது நினைவிடத்திற்கு சென்றும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு கன்னட சினிமா உலகிற்கே பேரிழப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்திருக்கிறார். புனித் ராஜ்குமாரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று தனது மகள் சௌந்தர்யா உருவாக்கிய செயலியின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வெளிட்டுள்ளார். அதில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி குணமடைந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது புனித் ராஜ்குமார் அகால மரணம் அடைந்துவிட்டார். புனித் ராஜ்குமார் இறந்த செய்தி தனக்கு 2 நாட்கள் கழித்து தான் தெரிவித்ததாகவும், அதை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும் ரஜினிகாந்த் தகவல் தெரிவித்திருக்கிறார். என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை புனித் என்றும், பெயர், புகழ் என கன்னட சினிமா உலகில் உச்சத்தில் இருந்தவர் என்றும் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.