குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டத்துடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வபோது மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றி சாலையில் வைத்துள்ளனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாலையில் போடப்பட்டுள்ள பாறைகள் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெரியாமல் விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. மேலும் அதிக பாறைகள் கிடப்பதால் அவ்வபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறையினர் எவ்விதமான எச்சரிக்கை பலகை மற்றும் பதாகைகள் வைக்காமல் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே சாலையில் கிடக்கும் ராட்சத பாறைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.