×

குமரியில் ‘சிப்பி’ மீன் சீசன் தொடக்கம்: குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலை

குளச்சல் : குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கியும் குறைவாக  கிடைப்பதால்  மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவை மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்படுகின்றன.  இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் ‘சிப்பி’மீன்கள் பிடிக்கப்படுகிறது. முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று  பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர். குமரி மாவட்டத்தில் குளச்சல்,கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தற்போது குளச்சலில் சிப்பி மீன் சீசன் தொடங்கி உள்ளது. குளச்சலை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட  மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். சிப்பி மீன் இந்த வருடம் குறைவாகவே கிடைத்து வருகிறது. நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட ஒரு பெட்டி  சிப்பி மீன் ₹3 ஆயிரம் முதல் ₹4 ஆயிரம் வரை  விலை போனது. ஒரு பெட்டியில் 500 எண்ணம் முதல் 600 எண்ணம் வரை சிப்பி மீன்கள் இருந்தது.  கடந்த 2 வருடமாக  சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சிப்பி மீன்களுக்கு கேரள ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். இந்த வருடம் கேரள வியாபாரிகளின் வருகை குளச்சலில் குறைந்துள்ளது. உள்ளூர் வியாபாரிகளே நேற்று அதிகமாக குளச்சலில்  குவிந்து போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

Tags : Kumari , In Kumari, ‘oyster’ fish season, fishermen, concern
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...