×

அமலுக்கு வந்தது கூகுள் கணக்குகளுக்கு இரட்டை சரிபார்ப்பு வசதி

புதுடெல்லி: உலகம் முழுவதும் சுமார் 180 கோடி பேர் கூகுளில் கணக்கு வைத்துள்ளனர். கூகுளின் ஜிமெயிலையே பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது பயனர்களுக்கு கூடுதல் இணைய பாதுகாப்பை வழங்கும் விதமாக, கூகுள் இரட்டை சரிபார்ப்பு வசதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதன்படி, கூகுள் கணக்கை திறக்க பாஸ்வேர்ட் மட்டும் போதாது. சரியான பாஸ்வேர்ட் போட்டதும், ஜிமெயிலை திறப்பதற்கான அனுமதி லிங்க் பயனரின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும். அதை அனுமதித்தால் மட்டுமே கூகுள் கணக்கை செயல்படுத்த முடியும்.

இந்த இரட்டை சரிபார்ப்பு வசதி மூலம், சட்ட விரோதமாக மற்றவர்கள் கணக்குகளை ஹேக் செய்பவர்களிடமிருந்து பயனர்களை பாதுகாக்க முடியும் என்கிறது கூகுள் நிறுவனம். முதல்கட்டமாக உலகம் முழுவதும் 15 கோடி கணக்குகளுக்கு இந்த வசதி தாமாக ஆக்டிவேட் செய்யப்படும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கூகுள் கணக்குகளுக்கும் இரட்டை சரிபார்ப்பு வசதி கட்டாயமாக செயல்படுத்தப்படும். இந்த வசதியை தொடர்ந்து வைத்திருப்பது பயனர்களின் விருப்பம். விரும்பாதவர்கள் இரட்டை சரிபார்ப்பு வசதியை முடக்கி வைக்கலாம்.


Tags : Google , Google Account, Dual Verification Facility, Security
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்