அம்பத்தூர்: அம்பத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் சோழபுரம் கோவிந்தராஜ் தெருவை சேர்ந்தவர் முகமது ரியாஸ். ஐடி ஊழியர். இவரது மகள் சபரீன் அசனா (9), அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி அசானாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.
சிறுமிக்கு, காய்ச்சல் மேலும் அதிகமானதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமிக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சபரீன் அசனா பரிதாபமாக இறந்தாள். சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் சோகத்தையும், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.