×

சென்னை மற்றும் புறநகரில் கனமழை பெய்தாலும் ஆவின் பால் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை: பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம்  எச்சரித்துள்ளது.  இதையடுத்து சென்னை மாநகரில் தங்குதடையின்றி பால் விநியோகத்தை கண்காணிக்க பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால் பண்ணைகளை ஆய்வு செய்தார். அங்குள்ள இயந்திரங்கள் மழைநீர் பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய பால்பண்ணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சென்னை மாநகரில் பால் விநியோகம் தங்குதடையின்றி நடைபெற மேலும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

* மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு பால் விநியோகம் செய்வதில் பாதிப்பில்லாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* ஆவின் பாலகங்கள், டெப்போக்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் இருப்பில்  வைக்கப்பட  வேண்டும்.
* மொத்த விற்பனையாளர்கள் மூலம் மாநகரின் பல பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
*  தற்பொழுது 178 பால் வண்டிகளில் 7.50 லட்சம் லிட்டர் பால், பால் அட்டைக்கு உண்டான பால் மற்றும் 166 வண்டிகளில் 6.10 லட்சம் லிட்டர் பால் மொத்த விற்பனையாளர்கள் மூலம் 2000 சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் பால் விநியோக வழித்தடங்கள் அமைக்கப்பட்டு நகரின் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய பகுதிகளில் தட்டுப்பாடு இன்றி பால் விநியோகம் செய்ய வேண்டும்.
* நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் நகரின் பிரதான பகுதிகளில் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
* பொதுமக்களுக்கு தேவையான பால் இருப்பு வைக்கும் வகையில் அனைத்து ஆவின் பாலகங்களிலும் 1/2 கிலோ மற்றும் 1 கிலோ பால் பவுடர் பாக்கெட்டுகள் இருப்பு வைக்க செய்ய வேண்டும்.
* நீண்ட நாட்கள் கெடாத டெட்ரா பேக் பால் பாக்கெட்டுகளை அனைத்து ஆவின் பாலகங்களிலும் போதிய இருப்பு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட  வேண்டும்.
* சென்னையில் பால் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக பால் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
* சுமார் 10,000 (1 மற்றும் 1/2 கிலோ) கிலோ பால் பவுடர் பாக்கெட்டுகள் ஆவின் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க வேண்டும்.
இந்த ஆய்வின்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், வட கிழக்கு பருவ மழை 15வது மண்டல அலுவலர் கே.வீரராகவ ராவ், ஆவின் மேலாண்மை இயக்குனர் கந்தசாமி உடனிருந்தனர்.

பால் மற்றும் பால்பவுடர் இருப்பு உள்ளது
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆவீன் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஆவடி நாசர்  பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பால் பொதுமக்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. அதுபோன்ற பேரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆவினில் தேவையான பால் மற்றும் பால்பவுடர் சேமித்து வைத்துள்ளோம். இந்த ஆய்வின்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Chennai ,Minister ,Gairy Agriculture ,Nassar , Chennai, Suburbs, Heavy Rain, Avin Milk, Dairy, Minister Nasser
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...