×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 6.30 மணியில் இருந்து 7.25 மணிக்குள் சுவாமி சன்னதியில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றுகின்றனர். இதைத்தொடர்ந்து தினமும் காலை, இரவில் கோயில் 5ம் பிரகாரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் உட்பட பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியாக, வரும் 19ம்தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும் அன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், தீப திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் எல்லை காவல் தெய்வ வழிபாட்டின் 2ம் நாளான நேற்று, பிடாரி அம்மன் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிடாரி அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, எல்லை தெய்வ வழிபாட்டின் 3ம் நாளான இன்று இரவு, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் விநாயகர் உற்சவம் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தாண்டும் தீப விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Tags : Kartadu Deepa festival ,Annamalayar Temple ,Thiruvandamalayar , Karthika Deepa Festival at Thiruvannamalai Annamalaiyar Temple starts tomorrow with flag hoisting
× RELATED திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவம்...