×

ஆப்கானிஸ்தானின் பெண்கள் படை!

நன்றி குங்குமம் தோழி

தாலிபான் தாக்குதலால் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட
பாதிப்பிலிருந்து மீண்டுவர இந்தியா பல்வேறு உதவிகளை அந்நாட்டிற்கு வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஆண், ெபண் என இரு பாலின ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளது.

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமி என்பது இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ அகாடமியாகும். இங்கு ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தின் பெண் அதிகாரிகளுக்கு 2017ஆம் ஆண்டிலிருந்து குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2017-ல் 20 நபரும், 2018-ல் 19 நபரும் பயிற்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு 20 பெண் அதிகாரிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.   

ஆப்கானிஸ்தான் பெண் அதிகாரிகள் அந்நாட்டு ராணுவத்தின் போக்குவரத்து, மனிதவள மேம்பாடு, காலாட்படை மற்றும் ரேடியோ தொலைத்தொடர்பு போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இந்த அதிகாரிகளில் பலர் இரண்டு முதல் ஒன்பது ஆண்டுகால அனுபவம் உடையவர்கள்.
இவர்களுக்கு இங்கு அளிக்கப்படும் பயிற்சியில் உடற்பயிற்சி, கவாத்து, ஆயுதப்படைப் பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, காலாட்படை போர் தந்திரப் பயிற்சி, மனிதவள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலத் தொலைத்தொடர்பு ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

தாரி மற்றும் பாஷ்டோ மொழிகள் மட்டுமே தெரிந்த அவர்களுக்கு இந்திய அதிகாரிகள் மேற்கண்ட பயிற்சிகளை அளித்துள்ளனர். இந்த பயிற்சியின் அனுபவங்களை பகிர்ந்த, பாலி கேப்டன் சோனியா நௌரி, “இந்திய ராணுவத்தினர் நேரம் மற்றும் ஒழுக்கத்தில் மிகவும் சிறப்பாக உள்ளனர். எங்கள் நாட்டில் அளிக்கும் பயிற்சியிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. கடினமாகவும் உள்ளது.

இங்கு அனைவரையும் சமமாக   மதிக்கிறார்கள். ஒருவர் கீழே விழுந்தாலும் அவர் எழ ஊக்குவிக்கிறார்கள். ஆயுதங்கள் மற்றும் கணினி சார்ந்த விஷயங்களில் இந்திய ராணுவம் சிறப்பாக உள்ளது. ஆண், பெண் பாலின வேறுபாடின்றி ஒன்றாக பயிற்சி எடுக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் இது போன்று  நடந்ததில்லை” என்கிறார்.

‘‘இந்தி படங்களை பார்த்து இந்தி மொழியை கற்றுக்‌ கொண்டேன்” என்று கூறும் இவர்கள், ‘‘அஜய் தேவ்கான், அக்‌ஷய்குமார், சல்மன் கான், கத்ரினா கைஃப்” போன்றோருக்கு ரசிகையாகவும் இருக்கின்றனர். மற்றொரு பெண் ராணுவ அதிகாரி கூறுகையில், “சென்னையின் மெரினா கடற்கரை ரொம்ப பிடிக்கும். எங்கள் நாடு சுற்றியும் நிலப்பகுதியாக இருப்பதால், கடற்கரை உள்ளது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. பானிபூரி ரொம்ப பிடித்துள்ளது” என்கிறார்.

ஐநா சபையின் உத்தரவின் படி ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் ஐந்தாயிரம் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் அதில் இருப்போரின் எண்ணிக்கை சொர்ப்பமே. அங்கு பெண்கள் ராணுவ பயிற்சிக்காக மலலாய் ராணுவ பள்ளி என்று சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் அங்கு பெண்களுக்கு முக்கியத்துவமோ, பயிற்சிகளோ கொடுக்கப்படுவதில்லை. அதன் அடிப்படையில் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக  சென்னையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பொதுவாக எல்லா நாட்டு ராணுவத்திலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளையே ஆப்கானிஸ்தான் பெண்களும் சந்திக்கின்றனர். அங்கு ராணுவத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மட்டுமில்லாமல் போர்கால பயிற்சிகள் மறுக்கப்படுகிறது. ராணுவத்தில் சேர்வதற்கு முன் பல பிரச்னைகள் சந்தித்திருந்தாலும், இதில் சேர்ந்த பின் அது குறைந்துள்ளது என்கிறார்கள்.

“இந்திய ராணுவ பயிற்சி ஆப்கானிஸ்தான் பயிற்சியைவிட பல மடங்கு மேம்பட்டது. அவர்களிடம் பேசியதிலிருந்தும், அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதிலிருந்தும் தெரியவந்தது” என்கிறார் இவர்களுக்கு பயிற்சி அளித்த அதிகாரி ஒருவர்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதோ, ராணுவத்தில் சேருவதோ அவ்வளவு சுலபமில்லை. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்குக் கூட அனுமதிப்பதில்லை. இன்னமும் பெரும்பாலோருக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் கட்டுப்பாடுகள் இல்லை என்று கூறப்பட்டாலும், இன்னமும் பல பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் ராணுவ உறவு

ஏ.என்.ஏ ஆண் ராணுவ அதிகாரிகள், சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓடிஏ )மற்றும் டெஹராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி
யில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். அக்டோபர் 2011-ல் மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இரு நாடுகளுடன் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் வலுவான உறவைக் கொண்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹெலிகாப்டர் துப்பாக்கி கப்பல்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியதை தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு திறனை வலுப்படுத்தும் முயற்சியில், இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா மேலும் இரண்டு M-24V ரக ஹெலிகாப்டர் துப்பாக்கி கப்பல்களை வழங்கியது.

3 பில்லியன் டாலருக்கும் அதிகமான அபிவிருத்தி உதவிகளுடன் ஆப்கானிஸ்தானில் நிறுவனக் கட்டமைப்பில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அன்னம் அரசு

ஜி.சிவக்குமார்

Tags : Afghanistan ,women ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு