×

திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி மீது அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழிஆகியோர் மீது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன், கடந்த 2020 ஏப்ரல் 18ம் தேதி அளித்த பேட்டியில்,  ‘அமெரிக்க அரசாக இருந்தாலும் சரி, ஒரு ஏழை நாடாக இருந்தாலும் சரி தனது மக்களுக்கு தேவையான பொருளுதவிகளை, பண உதவிகளை தருகிறது. ஆனால், நம் ஊரில்தான் பிரதமரும், முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கிறார்கள். மக்களிடத்தில் பிச்சை எடுக்கிற ஒரே அரசு இந்திய அரசு’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை இருப்பதாக கூறி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மாநகர அரசு வக்கீல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து பின்னர் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்க மாற்றப்பட்டது. இதேபோல், திண்டிவனத்தில், 2018ம் ஆண்டு  நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி கனிமொழி, குப்பையிலும் ஊழல் செய்துள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது  குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி ஆகியோர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். அப்போது, கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.  

அதிமுக அரசின் அரசு வக்கீல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்கட்சி பிரமுகர்கள் மீது அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளார் என்றார். தயாநிதி மாறன் சார்பில் வக்கீல் எம்.சினேகா ஆஜராகி, கொரோனா காலத்தில் மக்களுக்கு சேர வேண்டியவை வரவில்லை என்பதை சுட்டிக்காட்டியே மனுதாரர் பேசியுள்ளார். இதில் எந்த தவறும் இல்லை என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி ஆகியோர் மீது  தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு களையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : DMK ,Dayanidhi Maran ,AIADMK ,Kanimozhi ,Chennai ,iCourt , DMK MPs Dayanidhi Maran, AIADMK gossip cases against Kanimozhi canceled: Chennai iCourt order
× RELATED திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன்,...