×

திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடை தரமானதாக அமைக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு ரூ.33 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கவும், ஒப்புதல் கிடைக்கவும் தாமதமானதால் 2016ஆண்டு புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 3 வருடங்களாக பாதாள சாக்கடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக நான்கு மாடவீதிகள், கச்சேரி சந்து தெரு, ஏரிக்கரை தெரு, சான்றோர் தெரு, வணிகர் தெரு, திரௌபதி அம்மன் கோயில் தெரு, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பணியாளர்கள், ஒரு குறிப்பிட்ட தெருவில் பணிகளை முடித்துவிட்டு அடுத்த தெருவில் பணிகளை தொடங்க வேண்டும். ஆனால், பல தெருக்களில் ஒரே நேரத்தில் சாலைகளை தோண்டியதால். பள்ளங்கள் ஏற்பட்டு முழுமையாக மூடாமல் விடுவதால் அந்தந்த தெருக்களில் உள்ள வீடுகளில் வசிப்போர் தங்கள் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத அவல நிலை உள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் பதிக்கப்படும் குழாய்கள், கான்கிரீட் இணைப்புகள், பழுது நீக்குவதற்காக அமைக்கப்படும் மேன்ஹோல் எனப்படும் சந்திப்புகள் போன்றவை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல இடங்களில் அமைக்கப்பட்ட கான்கிரீட் மூடிகள் மற்றும் கட்டமைப்புகள் இடிந்து சரிந்து விட்டன. அனுபவம் இல்லாத பணியாளர்களை வைத்து வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது, விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இந்த பாதாள சாக்கடை பள்ளங்களில் மண் சரிந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், பாதாள சாக்கடைப் பணிகளால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர்கள் உரிய தரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டிய குடிநீர் வடிகால் வாரியம் கண்டு கொள்ளாமல் உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் இந்த பாதாள சாக்கடைப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தி தரமான முறையில் கான்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் மூடிகளை அமைக்க வேண்டும். திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* அறிவிப்பு வேண்டும்
பாதாள சாக்கடைப்பணிகளை மேற்கொள்வோர் முன் அறிவிப்பு ஏதும் இன்றி தெருக்களில் பள்ளங்களை தோண்டும்போது ஏற்கெனவே புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதனால் பல தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதன் காரணமாக பேரூராட்சி சார்பில் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

Tags : Thiruporur Municipality , Insisting that the underground sewerage system in Thiruporur municipality be standardized
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில்...