சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண உதவிகளும் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இப்போதே இந்த நிலை என்றால், இன்னும் ஒன்றரை மாதம் அதிக மழை இருக்கும். போர்க்கால அடிப்படையில் முன்கூட்டியே மோட்டார் வைத்து தண்ணீர் இறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். கோடம்பாக்கம் அஜித்நகர், விஜயராஜபுரம் சந்திப்பு, கோயம்பேடு - பூந்தமல்லி சந்திப்பில் அதிகளவு தண்ணீர் மற்றும் கழிவுநீரும் கலந்து வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.