சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான சாலையில் 25 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மாயாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மாயாற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பவானிசாகரிலிருந்து தெங்குமரஹாடா கிராமத்தில் தக்காளி பாரம் ஏற்றுவதற்காக சென்ற சரக்குவேன் செந்நிற மலை நீர் பெருக்கெடுத்து ஓடும் மாயாற்றை கடக்க முயன்றபோது எதிர்பாராவிதமாக வாகனம் தண்ணீரில் இழுத்துச் சென்றது. வாகன ஓட்டுனர் லாவகமாக வாகனத்தை இயக்கி கரை சேர்த்தார். இந்நிலையில் அப்போது ஆபத்தை உணராமல் மாயாற்றைக் கடக்க பின் தொடர்ந்து வந்த கார் மற்றும் மற்றொரு பிக்கப் வேன் இரண்டும் வெள்ளத்தில் சிக்கி கரை ஓரம் ஆற்றில் புதை மணலில் சிக்கி நகர முடியாமல் நின்றது.இதை கண்ட கரையோரம் நின்றிருந்த தெங்குமரஹாடா கிராம பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த வாகனங்களை கயிறு கட்டி மற்றொரு வாகனம் மூலம் இழுத்து வாகனங்களை மீட்டனர்.