இளையான்குடி : இளையான்குடியில் வடகிழக்கு பருவமழை மழை தொடர்ந்து பெய்வதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் தண்ணீர் ஓரளவுக்கு நிரம்பியுள்ளது. வாய்க்கால் மூலம் மேல் வரத்து தண்ணீர் வழிந்தோடுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால், நெல் மற்றும் மிளகாய் சாகுபடி செய்த நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், முனைவென்றி ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் தேவையான தண்ணீரை இருப்பு வைத்து நிலங்களில் பயிரிடும் பணி மற்றும் நாற்று நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உரமிடுதல், களையெடுத்தல் போன்ற பணிகளில் இளையான்குடி பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவையான யூரியா உரத்தை விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.