செங்கம்: செங்கம் அருகே ரூ.40 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியரசு(45), கூலித்தொழிலாளி. இவர் குடும்ப செலவுக்காக கடந்த 2019ல் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(40) என்பவரிடம் வட்டிக்கு ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினாராம். பின்னர், பிழைப்புக்காக மணியரசு வெளியூர் சென்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார்.
இந்நிலையில் அசலும் வட்டியும் தராததால் மணியரசு வீட்டுக்கு சங்கர் மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோர் நேற்று மதியம் சென்றனர். அப்போது, வீட்டின் கதவை பூட்டியுள்ளனர். பின்னர், சங்கர் தனது பைக்கில் மணியரசுவை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, ‘‘வட்டியுடன் கடனை செலுத்திவிட்டு நீ உனது வீட்டுக்கு செல்லலாம்’’ எனக்கூறி வீட்டுக்காவலில் வைத்துள்ளார். இந்நிலையில், மணியரசு ‘‘வெளியில் போய் சாப்பிட்டு விட்டு வருகிறேன்’’ என கூறிவிட்டு சென்றாராம். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மணியரசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மணியரசுவின் தம்பி ரமேஷ் புதுப்பாளையம் காவல்நிலையத்தில் நேற்று மாலை புகார் செய்தார். அதில், ‘‘எனது அண்ணன் கடந்த 2019ல் 5 பைசா வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினார். உரிய நேரத்தில் கடனை செலுத்தவில்லை எனக்கூறி அவரது வீட்டினை பூட்டிவிட்டு, பணத்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு போ என சங்கரும், சதீஷும் மிரட்டி அழைத்துச் சென்றனர். அதனால் பயந்துபோய் எனது அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவிற்கு சங்கரும், சதீஷும் தான் காரணம்’’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில் புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரையும், சதீஷையும் கைது செய்தனர்.