திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் - கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் புதிய போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், ‘‘தீபாவளிக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்களை அரசு பஸ்கள் எப்படி பத்திரமாக சொந்த ஊர்களுக்கு கொண்டு வந்ததோ அதேபோல் விடுமுறை முடிந்து மீண்டும் அவர்கள் செல்லும் இடத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்க்க போக்குவரத்து துறை தயாராக உள்ளது. மழை வெள்ளம் இருந்தாலும், சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும். சுமார் 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த வருட தீபாவளியை விட இந்த வருடம் போக்குவரத்துறை அதிக லாபம் ஈட்டி உள்ளது. பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டாலும் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டி வருகிறது.’’ என்றார்.